Wednesday, April 27, 2011

அனலாகி புனலாகி

 அவளை அன்றுதான் முதன் முதலில் பார்த்தேன். கோவில் பக்கமாய் நடந்து  வரும் சமயம் மனதையும் காதுகளையும் இனிமையாய் ஊடுருவியது அந்த குரல். குரல் வந்த திசையை நோக்கி நடந்தேன். பெண் ஒருத்தியின் அதரங்கள் அசைய அசைய இசை காற்றில் வளைய வந்தது. அவள் கோவில் வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தாள். அரவம் கேட்டு அலட்சியமாய் நிமிர்ந்து பார்த்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள். 

திறமை இருக்கும் இடத்தில் திமிரும் இருக்குமாம். இதை மனம் உணர்ந்தாலும் அவளின் பார்வையின் அலட்சியத்தால் மானம் இழந்து போனேன். அன்று துவங்கி, இன்று வரை தினமும் அவள் குரலை கேட்காவிட்டால் எதையோ இழந்து விட்டது போல ஆனேன். 

பெயர் கனகம். வயது முப்பதை தொட இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது. இசையில் ஈடுபாடு உண்டு. கோவிலை ஒட்டிய வீட்டில் தனியே வசிப்பவள். அருகில் உள்ள டவுனில் எதோ ஒரு கடையில் விற்பனை பெண். இந்த விவரங்களை சேகரிக்கவே  பல தர்மசங்கடங்களை சந்திக்க வேண்டியிருந்தது. 

காலையிலும் மாலையிலும் அவளை தேடிச்சென்று பார்ப்பது என் அன்றாட வேலையில் ஒன்றாகிப்போனது. எப்படியும் வேலைக்கு செல்லும் பேருந்தில் வைத்து அவளை பார்த்து விடுவேன். ஒருநாள் பார்க்காவிட்டாலும் அன்று நாள் முழுதும் என் மனம் எதிலும் இலயிக்க மறுத்தது. வார்த்தை ஒன்றும் பேசாத போதும் கோடி கோடி இன்பத்தையும் துன்பத்தையும் வாரி வழங்கினாள். நிலைமை இப்படியே சென்றுக்கொண்டிருக்க, அன்றும் நான் அப்படி பேருந்தில் அவளைத் தேடிக்கொண்டிருக்க, அவளை காணவில்லை. மனம் துடிக்க தொடங்கியது. " என்னவாயிற்று அவளுக்கு...? எதுவும் உடல்நிலை சரியில்லையோ...? வீட்டிற்கு போய் பார்க்கலாமா...? " யோசித்தவாறே திரும்பிய என் கண்களில் முதல் இருக்கையில் அமர்ந்திருந்த கனகம் கண்ணில் பட்டாள். அவளும் என்னை கவனிப்பது தெரிந்தது. இத்தனை  நாளில் அவளை தேடி வந்து பார்ப்பதை கண்டிப்பாக அறிந்திருப்பாள். என்னை பார்த்து சிரித்தும் வைத்தாள் அன்று. அசடு வழிந்து, வீட்டிற்கு திரும்பினேன். அன்று இரவு தூங்கவே இல்லை. அவளின் பளீரென்ற சிரிப்பு நினைவில் வந்து வந்து போனது. 

அன்று முதல் எங்கு பார்த்தாலும் புன்னகைக்க துவங்கியிருந்தாள். மிக அழகாய் சிரித்து கொன்று விட்டு போவாள். பின் வந்த நாளில் கொஞ்சமாய் பேச துவங்கியிருந்தோம். அவளின் சிரிப்பை எனக்கே ஏகபோக உரிமை ஆக்கிக்கொள்ள முடிவு  செய்துள்ளேன். அதற்காகத்தானே இவ்வளவு நாள் துடிக்கிறேன். ஆனால் அதென்னவோ, எல்லாருடனும் இயல்பாக பேசுபவள், என்னுடன் மட்டும் சிரிப்பையும் அளந்தே கொடுக்கிறாள். இதுவரை சில நிமிடங்கள் கூட சேர்ந்தார்ப்போல் பேசியதில்லை. மனதில் ஆசைகளுக்கு மட்டும் குறைவில்லை. 

கனகத்தை காதலிக்க துவங்கி இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது. எனக்கும் அவளுக்குமான இடைவெளி மட்டும் குறையவில்லை. பார்வையின் பரிச்சயம் மட்டுமே.

இன்று எப்படியும் சொல்லிவிடுவது என்று முடிவு செய்திருந்தேன். காலையிலேயே பேருந்து நிறுத்தத்திற்கு வந்து விட்டேன். நேரம் தான் நகரவில்லை. அதோ இதோவென நேரம் நகர, பேருந்தும் வந்து விட்டது. ஆனால் கனகாவை காணவில்லை. "... என்னவாயிற்று அவளுக்கு...? "  மனம் துடிக்க தொடங்கியது.

கால்கள் அவள் வீடு நோக்கி தானாக நடக்க தொடங்கியது. வீட்டை நெருங்க நெருங்க, என் இதயம் வேகமாக துடிக்க, அதன் சப்தம் எனக்கே கேட்டது. யாரோ ஒருவர் கனகாவின் வீட்டில் இருந்து வெளியே வந்தார். வந்தவர் என்னை பார்த்து ஒருவிதமாய் சிரிக்க, நான் கண்டுக்கொள்ளவில்லை. உடன் வெளியே வந்தவள், என்னை அங்கே எதிர்ப்பார்க்கவில்லை என்பது, அவளின் திடுக்கிட்ட முகத்தில் தெரிந்தது.

"வாங்க..."  என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவள் சில நிமிடங்களில் திரும்பி வந்தாள். முகம் கழுவியிருப்பாள் போலும். முகத்தை பார்த்து "ம்ம்.... சொல்லுங்க...என்ன விஷயம்...?..." என்றவளிடம், திக்கி திணறி இதுவரை மனதில் ஒளித்து வைத்திருந்ததை ஒருவாறு சொல்லிமுடித்தேன். பின், அவள் முகத்தை பார்க்க, ஆழ்ந்த மௌனம் அவளிடம். முகம் கவிழ்ந்திருந்தாள். கண்கள் கலங்க, தேம்பி தேம்பி அழத்துவங்கினாள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. "...ஏங்க... என்ன ஆச்சு...? ... ப்ளீஸ் அழாதிங்க..." அவளை பார்த்து கூறினேன். அவள் நிறுத்துவதாக தெரியவில்லை. சரி அழட்டும் அவளே சமாதானமாகட்டும் என்று சிறிது நேரம் மெளனமாக அமர்ந்திருந்தேன். சிறிது சிறிதாக அவள் அழுகை குறைய, அவள் அருகே சென்று அமர்ந்தேன்.

அழுகை குறைந்து என்னை நிமிர்ந்து பார்த்தவளிடம், "...என்ன ஆச்சு..." என்றேன். மெதுவான குரலில் மௌனத்தின் முடிச்சை அவிழ்த்தாள். "...நான்... நான் நல்ல பெண்  இல்லை. என்றோ வழி தவறியவள்..." என்றாள். ஆதரவில்லாமல் அநாதை ஆனதும், அலைகழிந்து போனதையும் விரிவாக சொன்னாள். "...செத்து போயிருப்பேன்... துணிவில்லை...ஈனமான என் பிழைப்பை சகிக்காமல் எத்தனையோ நாட்கள் அழுதிருக்கிறேன்... நீ என்னை விரும்புவதை என்றோ புரிந்து கொண்டேன்... எனக்கும் உன்னை பிடிக்கும்... உன் ஞாபகம் தான் எனக்கு கொஞ்சம் ஆறுதல் தரும்... ஆனால்  நிலைமை உன்னிடம் உண்மையை  சொல்லாமல் தடுத்துவிட்டது...

"எனக்கு தெரியும்...இனி நீ என்னை விரும்ப மாட்டாய்... இன்று நீ உன் காதலை சொன்னதே எனக்கு போதும்... மீதமிருக்கும் ஜீவனை ஆனந்தமாய் கழிப்பேன்..." அவள் பேச பேச நான் உறைந்து போயிருந்தேன். இவளிடம் இத்தனை இரகசியமா ? மனம் நம்ப மறுத்தது. அதனாலென்ன...?  நல்ல கலா ரசிகையான என் கனகம் ஒருபோதும் தவறி போக முடியாது  . மெதுவாக அவள் கைகளை பிடித்து என் கையில் வைத்து கொண்டு,  முகம் மறைத்திருந்த அவள் கூந்தலை விலக்கினேன். அழுததில் முகம் சிவந்துபோயிருந்தது. அவள் நிமிர்ந்து என் கண்களை தீர்க்கமாய் பார்க்க என் காதலை முழுமையாய்  உணரத்தொடங்கினேன்.

Tuesday, April 26, 2011

சாரல்

                                   " இன்னும் எவ்வளவு நேரம் மாடியிலேயே இருப்பாய் ? சீக்கிரம் கீழே வா... "  அம்மா ஐந்தாவது முறையாய் குரல் கொடுத்தாள். மாலை ஏழு மணி இருக்கும். பலவிதமான சிந்தனைகளில் சிக்கி தவித்து கொண்டிருந்தேன்.

                                    ஏதேதோ நினைவுகள் அலைகழிக்கும்  இறுக்கத்தில் இருந்து தப்பிக்க தான் மாடிக்கு வந்தேன். இமைகள் மூடிய சிறிது நேரத்திற்க்கெல்லாம் புதிதாய் ஒரு பெண் நினைவினில் நிழலாடினாள். மங்கலான கண்கள் அடர்ந்த கூந்தல் சுருள் சுருளாக நெளிந்து கொண்டிருந்தது. உதடுகளை அசைத்து ஏதோ பேசுகிறாளே. "... என்ன சொல்கிறாய் பெண்ணே ?...சற்று உரக்க பேசு...! ". மெதுவாய் உணர்ந்தேன் என்னை தான் அழைக்கிறாள் என்று. போகலாமா வேண்டாமா என்று யோசிக்கும் முன்னே கைகளைப்பற்றி இழுத்து சென்று விட்டாள். வெகுதூரம் அழைத்து சென்ற பின் என்னைப்பார்த்து முறுவலித்தாள். லேசாய் தூறல் ஆரம்பித்திருந்தது. சிறிது தூரத்தில் இருந்த வீட்டை நோக்கி இருவரும் ஓடினோம்.

                                 வீட்டின் வெளியே சலவைக்கல்லில் " பென்னிஸ் நெஸ்ட் " என்று பதிக்கப்பட்டிருந்தது. வீட்டில் நுழைந்ததும் என்னை இருக்கையில் அமரச்செய்து அப்பெண் உள்ளே சென்று விட்டாள். சுவரில் ஜீசஸ் கருணை பொங்க என்னைப் பார்த்தார். அவருக்கு கீழே ஏதேதோ வாசகங்கள்.
  

                                மரத்தால் ஆன வீடு போன்ற மாதிரி ஒன்று அருகில் இருந்த மேஜை மீது இருந்தது. அவள் அனுமதியின்றி அவ்வீட்டை தொட்டு பார்த்தேன். நான் நினைத்தது போல் அது மரத்தால் ஆனதன்று.  மெழுகால் நேர்த்தியாய் செய்யப்பட்டிருந்தது. அதன் ஜன்னலை மெதுவாய் திறந்து பார்த்த போது ஒரு குழந்தையும் நாயும் மெத்தையில் உறங்கிகொண்டிருந்தது தெரிந்தது. அந்த கைவினைப்பொருளில் இலயித்து போய் என்னையே மறந்து போனேன்.

                             " இந்தாருங்கள்... " என்று கோப்பையில் எதையோ நீட்டினாள். மறுப்பது அநாகரிகமாய் போகும் என்பதால் அவளையே பார்த்த வண்ணம் வாங்கி அருந்தினேன். அது மிகவும் சுவையான எலுமிச்சை சாறு. அவளின் பார்வையும் என்னை விட்டு அகலவில்லை. அவளிடம் பேசுவதற்காக நாக்கு துடித்த போதும் வார்த்தைகள் எங்கோ சென்று ஒளிந்து கொண்டன. 

                          "நான் யாரென்று அறிய வேண்டுமா?... உன்னையே கேட்டுப்பார்... எத்தனை முறை உன்னைச் சுற்றி சுற்றி வந்துள்ளேன்... உன் காலடியில் என் ஆசைகளையும் கற்பனைகளையும் சமர்ப்பணம் செய்த போதும் என்னைக் கண்டுக்கொள்ளாமல் ஏன் மறுதலித்தாய் ?... முடிவில்லாது போன என் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ளவே உன்னைக் கவர்ந்து வந்தேன்... காதல் சரித்திரங்களை படித்திருக்கிறாயா ?... காதலால் பிரிவை தாங்க முடியாது... நானும் நினைத்தேன் உன் நினைவிலேயே காலம் கடத்தலாம் என்று... எத்தனை நாள்தான் நிழலையே நிஜம் என்று கருதுவது ?... அந்த மெழுகு வீட்டை பார்த்தாயா ?... உள்ளே உறங்குவது என் குழந்தை தான்... அதனிடம் கேட்ட பின்பே உன்னைத் தேடினேன்... எண்ண அலைகளில் நீ குழம்பிக் கொண்டிருந்தாய்... புரியாது ஏதேதோ புலம்பிய உன் கதிர்கள் என்னைத் தாக்கியதும் உணர்ந்து கொண்டேன் நான் தேடிக்கொண்டிருந்த ஜீவன் நீதான் என்று...பென்னியின் பொக்கிஷம் நீ... இனி ஒருபோதும் உன்னை மீண்டும் தொலைந்து போக விட மாட்டேன்... " என்று சொல்லிக்கொண்டே அருகே வந்து முத்தமிட்டாள். அது இனிக்கவில்லை. 

                            அசந்து போய் அமர்ந்திருந்தேன். இவளை நான் இதற்கு முன்பு பார்த்திராத போதும் மிகவும் அன்னியோன்யமாய் பழகியவள் போல பேசுகிறாளே...! எப்பொழுது இவள் காதலை வெளிப்படுத்தினாள் ? அதை எப்பொழுது நான் மறுத்தேன் ? ஒருவேளை எப்பொழுதும் போல நான் கனவினில் கரைந்து கொண்டிருக்கிறேனா? இல்லை...! என் ஸ்பரிசத்தை என்னால் துல்லியமாக உணர முடிகிறதே...! எது எப்படி இருப்பினும் புதிதாய் வந்திருக்கும் வாசமான இந்த ஓவியத்தை நுகர முடிவு செய்தேன். 

                           நீராடியதும் வெப்பம் தணிந்து போனது. விதவிதமான ஆடைகளை அழகாய் அடுக்கி வைத்திருந்தாள். வெளிர்நீல நிறத்தில் உடுத்திக்கொண்டேன். அறையினில் மெல்லியதாய் பரவியிருந்த பூண்டின் வாசனையால் கொஞ்சம் அசௌகர்யமாய் உணர்ந்தேன். அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை ஆராய்ந்து கொண்டிருந்த போது பென்னி மீண்டும் வந்தாள்.            "... அபூர்வமான புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளேன்... உனக்குத்தான் இதிலெல்லாம் ஆர்வம் அதிகமாயிற்றே...! " விநோதமாய் காணப்பட்ட ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினாள். அதில் உள்ள எழுத்துக்களையும் சித்திரங்களையும் பிறர் தீண்டினால் அவைகளின் பரிசுத்தம் பங்கம் அடைந்ததாய் கண்ணீர் சிந்துமாம். என்னைத்தவிர வேறு யாரையும் வாசிக்க அவைகள் அனுமதிப்பதில்லை என்று பென்னி சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. 

                         ஆசைத்தீர நீண்ட நேரம் பென்னி எனக்காக வாசித்தாள். அவளின் மங்கலான கண்கள் மேலும் மேலும் ஒளி இழந்து கொண்டே சென்றது. அவளின் கருவிழிகளில் துளையிட்டு என் கண்களின் ஒளியால் அதை நிரப்பினேன். பென்னியின் முகத்தை நிமிர்த்தி அவளின் கண்களில் என் கண்கள் பதிய பார்த்தபோது "... நான் உன்னை முழுமையாய் காதலிக்கிறேன்... " என்று கண்ணீர் மல்க தோள்களில் சாய்ந்தாள். என்னை அழகாய் நேசிக்க ஒரு பெண் இருக்கிறாளே...! பென்னியின் அரவணைப்பில் வேரோடு என்னை மறந்துக்கொண்டிருந்த போது அறையில் பரவியிருந்த பூண்டின் வாசனை அவளின் மீதும் லேசாய் கமழ்வதை உணர்ந்தேன்.

                        அங்கங்கே பச்சை முயல்கள் துள்ளிக்குதித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தன. ஆசையாய் ஒரு முயலைப்பிடித்து கைகளில் வைத்துக்கொண்டேன். உடனே பென்னி அதை விட்டுவிடுமாறும் இல்லையேல் அதன் பச்சை நிறம் உனக்கும் வந்துவிடும் என்று கூறியவுடன் திடுக்கிட்டு முயலை விட்டுவிட்டேன். எனது உள்ளங்கை இப்போது இளம்பச்சை நிறத்தில் மாறியிருந்தது. தண்ணீரைக் கேட்ட போது பென்னி பாதரசம் கொண்டு வந்து கைகளில் ஊற்றினாள். பழையபடி உள்ளங்கை சிவந்து போனது. அப்போதுதான் கவனித்தேன் பென்னியும் இளம்பச்சை நிறத்தில் இருந்தாள். பயம் மென்மையாய் பூக்க தொடங்கியது. சிக்கலான வலையை பென்னி நான் அறியாமல் என்னைச்சுற்றி பின்னிக் கொண்டிருக்கிறாளோ என்ற ஐயம் பிறந்தது. ஒருவேளை இதில் இருந்து எப்போதும் மீள முடியாமல் போனால்...!

                                 "வா..!...சற்று நேரம் வெளியே சென்று வரலாம்... "  என பென்னி அழைத்ததும் மறுக்க முடியாமல் அவளுடன் வெளியே சென்றேன் . வெளியே குளிர் கடுமையாய் இருந்தது. மிக மெல்லிய ஆடைகளை உடுத்தியிருக்கும் பென்னியால் குளிரை எவ்வாறு தாங்கிக்கொள்ள முடிகிறது? பனிமழை பொழிய தொடங்கியது. பனிமழை பொழிய தொடங்கியதும் பென்னியின் முகம் சிவந்து மலர்ந்தது. எங்களைப்போலவே பலபேர் உலவிக்கொண்டிருந்தனர். சில இணைகளில் ஆண்களும் சில இணைகளில் பெண்களும் பச்சை நிறத்தில் காணப்பட்டனர். மௌனமாகவே நடந்து வெகுதூரம் சென்றோம். இருந்தும் திரும்பினால் வீடு மிக அருகிலேயே இருப்பது வியப்பாக இருந்தது. அவளுடைய இருப்பு நான் அறிந்திராத உணர்வுகளை என்னுள் உருளச்செய்தது. இதுவரை எவருடன் பழகும்போதும் இவ்வளவு சுலபமாய் பாதுகாப்பாய் என்னை நான் உணர்ந்ததில்லை. எந்தக் கூண்டிலும் அடைபடாமல் சிட்டாய் சிறகுகளை விரித்து நான் பென்னியோடு பறந்து கொண்டிருந்தேன். இந்த நிலை அப்படியே நீடித்து நிற்க மனம் பிரயத்தனம் செய்தது. 
     
                                         மறுபடியும் வீட்டிற்கு திரும்பிய போது அறைகளில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் வரவேற்றன. வெண்மையான திரைச்சீலைகள் தூய்மையான முலாம் பூசியது. நான் அவளின் கரத்தை விடாது பிடித்தபடி முதலில் பார்த்த அறையினுள் பிரவேசித்தோம். மறுபடியும் மெழுகு வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்த போது அந்த பொம்மைக்குழந்தை புன்னகையுடன் உறங்கிக்கொண்டிருந்தது. படுக்கையில் சரிந்து விழுந்தேன். அருகில் அமர்ந்த பென்னி என் முகத்தை அவளின் மடியில் கிடத்திக்கொண்டு அந்த மெழுகுவீட்டை பார்த்துக்கொண்டிருந்தாள்.

                                           " தெரியுமா உனக்கு...? எத்தனை ஆண்டுகளாய் உன்னைத் தேடினேன்... எங்கோ புலப்படாமல் மறைந்துக் கொண்டிருந்தாயே... காத்திருந்து காத்திருந்து கடைசியாய் உன்னை கண்டுபிடித்து விட்டேன்... உனக்குத் தெரியாமல் உன்னை ரசிப்பதில் அலாதியான சுகம் கிடைக்கும்... அந்த சுகத்தில் மூழ்கி மூழ்கி திளைத்துள்ளேன்... அபரிதமான உன் அறிவிற்கு அப்பட்டமான அடிமையானேன்... உன் அறிவை புணர்ந்து நானும் அறிவாளியாய் மாற பலமுறை முயர்ச்சித்துள்ளேன்... சிறிதுகாலம் உன்னை உலகத்தார் அனுபவிக்கட்டுமே என்றே பொறுத்திருந்தேன்...என் பொறுமையே உனது குழப்பங்களின் வித்தாய் அமைந்தது... உனக்கும் தெரியாமல் என்னை நீ தேடிக்கொண்டிருந்தாய்... என் மடியில் படுத்து துயில உன் உள்மனம் ஏங்கிக் கொண்டிருந்தது... நீ அனுபவிக்கும் துயரை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை... நிம்மதியாய் உறங்கு...! எப்பொழுதும் தூறலாய் மகிழ்ச்சியின் சாரலாய் உனக்காக நான் இருக்கிறேன்..."  என்று முத்தமிட்டாள். அது இனித்தது இப்போது. 

Sunday, April 17, 2011

என்னோடு நான்

                                     " எங்கே போகலாம்? " .....இது சுரேன்.
                                     " உன் விருப்பம் ".... இது நான்.
                                     " மெரீனா பீச் ஓகே வா? "... என்றான்.
அமைதியாய் பிரயாணித்தோம். எதாவது பேச மாட்டானா என்று ஏங்கினேன். மணலில் நடந்தோம். அமைதியான இடமாய் தேர்வு செய்து அமர்ந்தோம். இப்போதும் பேசவில்லை. " அநேகமாய் அதைப்பற்றி தீவிரமான சிந்தனையில் மூழ்கி விட்டானோ? ... யோசிக்கட்டும்...! யோசிக்கட்டும்...! " ....அலட்சியமாய் சிரித்துக்கொண்டேன். 

                               கண்களை ஓட விட்டேன். ஏதேதோ பிம்பங்களை அவை துரத்தின. நெருங்க நெருங்க புரிந்தது. அது நானும் சுரேனுமென்று. முதன் முதலாய் நானும் அவனும் வந்த போதும் மௌனமாய்த்தான் வந்தான். அதிகம் பேசாதவன் போல் இருந்தான். திருமணமாகி ஒரு மாதம் கழித்து அவன் அப்பாவின் தூண்டுதலால் என்னை அழைத்து வந்திருந்தான். அந்த முப்பது நாளில் முப்பது வார்த்தைகள் பேசியிருந்தாலே அதிகம். என்றாவது என் பெயர் சொல்லி அழைக்க மாட்டானா என்று ஏங்கவே தொடங்கியிருந்தேன். 

                              சுரேனின் அக்காவிற்கு என்னை ரொம்பவே பிடித்திருந்தது. பக்கத்து தெருவில் தான் அவள் வீடு. நாள்முழுதும் என்னுடனே இருந்தாள். பேச ஆரம்பித்தால், அதுவும் சினிமா என்றால் இலேசில் முடிக்க மாட்டாள்.  "என் பொண்ணுக்கு சூர்யான்னா ரொம்ப பிடிக்கும். எனக்கும் தான். அவன் கண்ணு ரொம்ப நல்லா இருக்கில்ல " ...என்பாள். பதிலை நான் யோசிக்கும் போதே வேறொரு செய்தியை தொடங்கியிருப்பாள். அவள் விசயத்தில் என் காதுகள் சொற்களை வடிகட்டியே பழகிவிட்டன. அவள் சென்றதும் வீடு மீண்டும் நிசப்தத்தில் மூழ்கிவிடும். 

                              மாமா மாடியில் தன் அறையில் ஏதாவது இசையில் மூழ்கியிருப்பார். கஜல் கேசட்டுகள் குவிந்திருக்கும் அவர் அறையில் மெல்லிய ஊதுவத்தி கமழ்ந்து கொண்டிருக்கும். மாமாவின் தனிமையில் கல் எறிய ஒருபோதும் துணிந்ததில்லை நான். அத்தை பழுத்த சுமங்கலியாய் ஒரு மாதம் முன்புதான் போய் சேர்ந்திருந்தாள். மாமாவும் அத்தையும் இருந்த புகைப்படத்தை பார்த்தேன். வாழ்வை முழுமையாய் புரிந்திருந்தவளை போல அர்த்தத்துடன் சிரித்துக்கொண்டிருந்தாள். " என்ன ஒரு அருமையான பிறவி...! " . ஒருவேளை அத்தை உயிரோடு மீண்டும் வந்தால்? 

                            நான் தனிமை விரும்பி என்று சொல்லிக்கொண்டது எல்லாம் அவ்வப்போது நினைவுக்கு வரும். அப்போதெல்லாம் என்னை விநோதமாய் பார்ப்பார்கள். மௌனமாய் இருப்பதும், திடீரென சிரிப்பதுமாய் இருந்த என்னை அதிசயமாய் பார்த்து, பிறகு விலகுவார்கள். மீண்டும் தனிமையில் மூழ்கி போவேன். " சதா இப்படி மௌனியாய் இருக்காதேம்மா " ...என்று அப்பாதான் கடிந்து கொள்வார். இதற்கே கோபிப்பேன் அவரை. அப்பொழுது அதன் அர்த்தம் புரியவில்லை என்றாலும், மெல்ல மெல்ல மௌனத்தை கொலை செய்ய தொடங்கினேன். என்று என் இயல்பை தொலைத்தேனோ, அன்றிலிருந்து நான் இயல்பாய் மாறிவிட்டேனாம். எல்லாரும் சொன்னார்கள். மீண்டும் தோழிகளும் ஒட்டிகொண்டார்கள்.

                              மௌனத்தின் கொடூரத்தை எனக்கு சரியாய் உணர்த்தியது சுரேன் மட்டுமே. " பேசுவதின் மகத்துவம்" என்று புத்தகம் போடலாமா என்று கூட வேடிக்கையாக யோசித்தேன். மூன்று மாதங்கள் முடிந்து போயிருந்தது. அவன் அக்காவுடன் நானும் ஒட்டிக்கொண்டேன். எல்லாரும் பரிச்சயமாயிருந்தார்கள். அவனை தவிர.

                            சீக்கிரமே, எல்லாவற்றிற்கும் விடை கிடைத்தது. ஒருநாள் மாலையில், மாடியில் தயங்கி தயங்கி பேசினான். அவன் அம்மாவின் கட்டாயத்தினாலே திருமணம் செய்து கொண்டதாக சொன்னான். ஒருவாறு இதை யூகித்திருந்தேன். இதை புரிந்தே நானும் விலகியிருந்தேன்.

                            " என்னால் நீ எந்த சந்தோசத்தையும் அடைய வில்லை என்று எனக்கு தெரியும். எவ்வளவு முயற்சித்தும் என் மனம் உன்னிடம் ஈடுபட மறுக்கிறது. எல்லாவற்றையும் ஒரு கேட்ட கனவாக நினைத்து மறந்து விடு. முடிந்தால் என்னை மன்னித்து விடு. சட்ட ரீதியாக நாம் விலகிவிடலாம். என்ன சொல்கிறாய்? " .... என்று கேட்டுவிட்டு காத்திருந்தான். பதில் சொல்லாமல் கீழே வந்து விட்டேன்.

                             அவன் வெகுநேரமாகியும் கீழே வரவில்லை. வழக்கம் போல் நான் என் பணிகளை செய்தேன். ஏதேதோ யோசனை. சற்றும் கரிசனமில்லாமல் நேரம் தன் வழியே சென்று கொண்டிருந்தது. மறுநாள் மாலை என் வீடிற்கு திரும்பினேன். நிரந்தரமாய்...! இன்றோடு எட்டு மாதங்கள் ஆயின.

                              இன்று இவனை தற்செயலாக பார்த்ததும் செயலிழந்து போனேன். அழைத்ததும் மறுக்க மனமில்லாமல் சற்றே நம்பிக்கையுடன் கடற்கரை வரை வந்திருக்கிறேன் இரண்டாம் முறையாக. மெதுவாக சுயநிலைக்கு வந்தேன். " ஹல்லோ எதாவது காதில் விழுகிறதா? " ...ஆர் யு ஆல் ரைட்? " என்றான். ...." ம்... என்ன சொன்னிங்க? " ... என்றேன். 
                           
                             நாளை தான் வெளிநாடு செல்வதாகவும், மறுபடியும் இந்தியா திரும்பும் எண்ணம் இல்லை என்றும் சொன்னான். இருள் கவிய தொடங்கியிருந்தது. சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்து விட்டு அவன் கிளம்பி போக, தனியாய் நடந்தேன். எத்தனை முயற்சித்தும் அழாமல் இருக்க முடியவில்லை. ஏனோ, புகைப்படத்தில் இருந்த அத்தை நினைவில் வந்து போனாள்...!!!

உடைந்து போவேனோ...!

மறைத்து மறைத்து பார்க்கிறேன் என்னை.
முடியவில்லை...!
என்று உடைந்து போவேனோ 
உன் முன்னே.
தெரியவில்லை...!

ஒத்திகை...!!!

எப்படியும் எதிரே வந்தால் 
ஊமையாவாய்...!
அதற்கேன் இத்தனை ஒத்திகை...!!!

அந்நியமாகிறாய்...!!!

உயிர்தான் நீ எனக்கு.
ஒப்புக்கொள்கிறேன்...!
அதெப்படி - 
ஒரு நொடியில் அந்நியமாகிறாய்...!!!

என்னை தவிர...!

புரிந்து வைத்துள்ளாய் 
பல புதிர்களை.
உன்னால் பூரித்து போகும் 
என்னை தவிர...!